நீ கொன்ற எதிரி நான் தான் தோழா
Rs. 500.00
என் கவிதைகளில் போரின் தாக்கமும், வலியும், மாணவர்களின் கையறு நிலையும், வீடிழந்தோரின் இயலாமைகளும், இன உணர்வும், விடுதலை வேட்கையும் இன்ன பலவும் பேசு பொருளாக உள்ளன. அதற்கு முக்கிய காரணம் நான் வளர்ந்த சூழல் அப்படி. என் கண்முன்னே அன்றாடம் நடந்த கொடுமைகள், இராணுவ அடக்குமுறைகள், இன வன்முறைகள் என்று எல்லாமே என்னைப் பாதித்தன. கிட்டத்தட்ட பல்கலைக் கழகம் போவது வரையான என் இருபது வருட இளமைக் காலத்தில், குறைந்தது பத்துக்கு மேற்பட்ட ஊர்கள், எண்ணற்ற பாடசாலைகள், பல நாட்களில் ஒரு நேர உணவு, சில நாட்களில் பட்டினி என்று அலைந்து திரிந்து காலத்தைக் கழித்த குழந்தைகளில் நானும் ஒருவன். கடந்த இருபது வருடங்களாக நான் எழுதிச் சேர்த்த 59 கவிதைகள் இந்தக் கவிதைப் புத்தகத்தில் உள்ளன. அவற்றில் சில கவிதைகள் 2009 க்கும் முன்னர் எழுதப்பட்டவை இன்னும் பல கவிதைகள் 2009 இன் பின்னைய சூழலைப் பிரதிபலிப்பவை. “பட்டவனுக்குத்தான் நோவு தெரியும்” என்பதால் ஒருசில கவிதைகளில் ஈழம் தாண்டி வெளியுலகில் நடக்கும் சில பல நடப்புக்களை, வலிகளை, சோகங்களை, அவலங்களை பேச முற்பட்டுள்ளேன். பெரும்பாலும் அன்றாட வாழ்க்கையில் நான் கண்டு, கேட்டு, பட்டு, உணர்ந்த விடயங்களைக் கவிதை மூலம் கொண்டுவர முயன்றிருக்கிறேன்.
